Thursday, November 10, 2011

குப்பைமேடாகும் குடியிருப்புப் பகுதி - கண்டு கொள்ளாத திருவாரூர் நகராட்சியின் ஆணவப்போக்கால் தொடரும் அவலம்

**

நீங்கள் இந்த புகைப்படங்களில் பார்ப்பது, திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட, 9-வது வார்டு, ராமகே ரோட்டின் நுழைவாயில்.

**

இங்கு, தினந்தோறும் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை, கொட்டிவைக்கின்றனர் நகராட்சி ஊழியர்கள். அதை அப்புறப்படுத்துவதில் மிகுந்த அலட்சியம் காட்டுகின்றனர். அப்படியே, அப்புறப்படுத்த வந்தாலும், லாரியை சாலையை மறித்து நிறுத்திக்கொள்கின்றனர். பொதுமக்களோ, மற்ற வாகனங்களோ சாலையில் செல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

**

இந்த பகுதியில், கொசு பெருகிவருகின்றது. சாலையைக்கடக்க முடியாமல், துர்நாற்றம் வீசுகின்றது. இப்பகுதியில் வசிப்போர் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இதைப் பற்றி, சென்றமுறை பதவியில் இருந்த, நகர்மன்ற உறுப்பினரிடமும்,நகராட்சி ஆணையரிடமும், பலமுறை புகார் செய்தும், செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் ஆகியது. பலனேதுமில்லை.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய உறுப்பினராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பதவியேற்றப்பிறகும் இந்த அவல நிலையே தொடர்கிறது.

இத்தனைக்கும் இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது.

ஆணையருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், இந்தப் பகுதி மக்களின் துயரம் என்றுதான் கண்களில் படுமோ? இந்த நிலை என்றுதான் மாறுமோ?!

ஆணையாளரே! அரசு வாகனத்தில், சிமிண்ட் சாலைகளாக மாற்றப்பட்ட, முக்கிய வீதிகளில் மட்டும் உலா வந்தால் போதாது. வரி கட்டும் மக்களின் துயரங்களைத் தீர்க்கவும் செய்யணும்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி உல்லாசமாய் இருப்பவர்களுக்கு இது என்று புரியுமோ?!

**புகைப்படங்கள் எடுத்தது 10.11.2011 அன்று காலை.