Wednesday, August 15, 2012

‘டெசோ’ மாநாடு ஆய்வரங்கில் கலைஞரின் தலைமை உரை


ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு குறுகிய கால, நீண்ட காலத் தீர்வுகள் தேவை.
கட்டுமான பணிகள், கவுரவ வாழ்க்கை உடனடித் தேவை .
-  ‘டெசோ’ மாநாடு ஆய்வரங்கில் கலைஞரின் தலைமை உரை.


சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள ‘அக்கார்ட்’ ஓட்டல் கருத்தரங்க மண்டபத்தில் ‘டெசோ’ மாநாட்டிற்கு வந்திருந்த பன்னாட்டு அறிஞர்களின் கூட்டம்
கடந்த 12-ம் தேதி (12-08-2012) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

அப்போது ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு குறுகிய கால, நீண்ட கால தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் என்பதையும்;
கட்டுமானப் பணிகள் மற்றும் கவுரவமான வாழ்க்கை உடனடித் தேவை என்பதையும் கலைஞர் வலியுறுத்தினார்.

ஆய்வரங்கத்தில் கலைஞர் அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களே, லோக் சக்தி கட்சியின் தலைவரும் எனது நீண்ட நாள் அருமை நண்பருமான நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களே, சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திரு. ராம்கோபால் யாதவ் அவர்களே,
தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.டி. ஷாரிக் அவர்களே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் திரு. கோவிந்த ராவ் ஆதிக் அவர்களே,
ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியின் திரு. கே.சி. தியாகி அவர்களே, நவ சம நமாஜா கட்சியின் தலைவர் டாக்டர். விக்ரம் பகு கருணா ரத்னே அவர்களே,
மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, நைஜீரியா, ஸ்வீடன், நார்வே, மொராக்கோ, துருக்கி, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில்
இருந்து வந்துள்ள மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் திரு. கி. வீரமணி, திரு. தொல். திருமாவளவன், திரு. சுப. வீரபாண்டியன், திருமதி. சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவர்களே,

வரவேற்புக் குழுவின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே, இலங்கையில் இருந்து வந்திருக்கும் தமிழ் இனத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளே, மதிப்பிற்குரிய
நாடாளுமன்ற உறுப்பினர்களே, நண்பர்களே,

ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட வேண்டும் என்பதற்காக தங்களின் வாழ்க்கையை போர்க் களத்தில் ஈந்து, கல்லறைகளில் இடம் பெற்றிருக்கும் வீரத் தியாகிகளுக்கு
முதற்கண் எனது பணிவான, மரியாதை கலந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான, திரு. ராம்விலாஸ் பாஸ்வான், பேராசிரியர். திரு. ராம் கோபால் யாதவ், திரு. எஸ்.டி. ஷாரிக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
திரு. கோவிந்தராவ் ஆதிக், திரு. கே.சி. தியாகி ஆகிய அனைவரும், ஏழை மற்றும் கீழ் நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வரும் பொதுமக்களின் நன்மதிப்பைப்
பெற்று விளங்கும் தலை சிறந்த அரசியல் மேதைகளாவர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, நைஜீரியா, ஸ்வீடன், நார்வே, மொராக்கோ, துருக்கி, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து மதிப்பு மிகுந்த நமது
பிரதிநிதிகள், தங்களின் மதிப்பு மிகுந்த கருத்துகளை, ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டி, நீண்ட தூரம் பயணம் செய்து இந்த மாநாட்டிற்கு வந்துள்ளனர்.

தமிழ் ஈழ மக்களால் மிகவும் மதிக்கப்பட்டு ஓர் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள, மிகவும் புகழ் பெற்ற இலங்கை தமிழர் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தங்களது கடமை என்று எண்ணி இலங்கையிலிருந்து வந்திருக்கிறார்கள்.

உங்கள் ஒவ்வொருவரையும் மிக்க அன்புடன் வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எங்களது அழைப்பை ஏற்று, அருகில் இருந்தும், நீண்ட தொலைவில் இருந்தும்
நீங்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறீர்கள். டெசோ அமைப்பின் சார்பாக சென்னைக்கு வருவதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட துன்பங்களுக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி நிரம்பியவனாக
இருக்கிறேன்.

இந்த மாநாட்டில் எத்தகைய மக்கள் கூடியிருக்கிறார்கள் என்பதே, ஈழத் தமிழர்களின் பிரச்சினை பற்றிய தமிழ்நாட்டின் கவலையை மட்டுமல்லாமல், இந்தியாவின் கவலையையும்,
உலக நாடுகளின் கவலையையும் விளக்கும் வகையில் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகும்.

இலங்கையில் உள்நாட்டுப் போருக்கு முன்னும் போருக்குப் பின்னும் நடந்தேறிய நிகழ்வுகளைப் பற்றி உலகின் நாடுகள் அனைத்தும் மிகவும் கவலை கொண்டுள்ளன. ஈழத் தமிழர்களின்
பிரச்சினை மனிதத் தன்மை, மனித நேயம், மனித உரிமைகள் மற்றும் மனிதரின் கவுரவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சினையாகும். எனவே, தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி மேற்கொள்ளப் படும்
தீர்மானங்கள் பற்றி உலக நாடுகள் அறிந்து கொள்ள ஆவலாக இருப்பது இயல்பேயாகும்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தீயின் மேல் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல் உள்ளன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்படும் நீண்ட கால தாமதம்,
நாகரிகத்தையும், பண்பாட்டையும் பல நூற்றாண்டு காலத்துக்கு பின்னோக்கி இழுத்துச் செல்வதாக அமைந்துவிடும். முன்னதாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்ட இந்த இனப்படுகொலை, கொடிய குற்றங்கள்,
ஒரு தேசிய இனத்தை மதம், மொழி, கலாச்சார அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமாக நடத்தியது, பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்கப்பட்டது ஆகியவற்றுக்கு நாம் சாட்சியங்களாக
இருந்த காரணத்தால் வருங்காலத் தலைமுறையினர் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள்.

மதுரை டெசோ மாநாடு!

இந்த மாநாட்டைப் பார்க்கும்போது எனது நினைவு பழைய காலத்திற்குத் திரும்பிச் செல்கிறது. 1986 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி, தமிழ் இலக்கியத்துக்கும், பாண்டிய நாட்டுக்கும்
தலைநகராக விளங்கிய மதுரையில், இது போன்ற ஒரு மாநாட்டை டெசோ அமைப்பு நடத்தியது. அந்த மதுரை மாநாடு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையிலும், சந்தர்ப்பத்திலும் நடந்தது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பேயி, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் திரு. என்.டி. ராமராவ், உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் எச்.என். பகுகுணா மற்றும் பல முக்கியமான
தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். அனைத்து தமிழ் அமைப்புகளும், தீவிர போராளி அமைப்புகளும் அந்த மாநாட்டில் பங்கு பெற்றன.

அந்த மாநாட்டில், சகோதர உறவுகளிலும், பாசத்திலும் இருந்து ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு உருவாக வேண்டும் என்று நாம் இந்தியாவின் பக்கத்திலிருந்து வலியுறுத்தினோம்.
அப்போது நான் எனது கைகளைக் கூப்பி உணர்ச்சி மிகுந்த, கனிவான வேண்டுகோள் ஒன்றை போராளி அமைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் விடுத்தேன்.

தமிழ்நாட்டு மக்களின் இதயங்கள் எவ்வாறு வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கின்றன, அவர்களின் ரத்தம் எவ்வாறு கொத்தித்துக் கொண்டிருக்கிறது, இலங்கைத் தமிழர்களுக்காக அவர்களின் நரம்புகள்
எவ்வாறு துடித்துக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு முழுமையான தோற்றத்தை அந்த மதுரை டெசோ மாநாட்டில் நான் திரட்டித் தந்தேன்.

மதுரை டெசோ மாநாட்டுக்கு முன்பு, டெசோ அமைப்பின் சார்பாக, ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு பொது மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, 1985 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோவை,
திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் பேரணிகளும், பொதுக் கூட்டங்களும் நடத்தப் பட்டன.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வின் தலைவராக உள்ள நிலையில், ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் எனது கட்சி ஆற்றிய பங்கினைச் சுட்டிக்காட்டுவது
எனது புனிதமான கடமையும், உரிமையும் ஆகும். இதனை மிகவும் சுருக்கமாகக் கூற தயவு செய்து என்னை அனுமதிக்கவும்.

தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலமாக தனது உறுதியான, உணர்வுபூர்வமான ஆதரவை அளிப்பதில் தி.மு.க. உறுதியாக
இருந்திருக்கிறது என்ற உண்மைக்கு வரலாற்று நிகழ்வுகளே சான்றுகளாக அமைந்துள்ளன.

‘ஈழ காந்தி’ தந்தை செல்வா அவர்களின் காலத்தில் தொடங்கி, அமிர்தலிங்கம் அவர்கள் காலத்தில் தொடர்ந்து, இன்று வரை நீடித்திருக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக தி.மு.க.
அளித்த ஆதரவு அதன் இதயம் மற்றும் மனத்தில் இருந்து பொங்கி வந்ததாகும்; அந்த ஆதரவில் நாங்கள் தொடர்ந்து உறுதியாகவும்; ஆர்வத்துடனும் இருந்து வந்திருக்கிறோம்.

எங்களை உருவாக்கிய தலைவர், பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், 1956 ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், ‘இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே’
என்னும் தமிழ் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கி, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தும் இலங்கை அரசின்
அடாத, கொடுமையான முயற்சிகளைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நான் முன்மொழிந்தேன். இந்தத் தீர்மானத்தை பூவலூர் பொன்னம்பலனார் அவர்கள் வழி மொழிந்தார்கள்.

அண்ணா அவர்களால் தீர்மானம்

1961 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற நமது பொதுக் குழுக் கூட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானம் அறிஞர் அண்ணா அவர்களாலேயே தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது..
அந்தக் கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிந்தேன். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை அய்க்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு இந்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்தத்
தீர்மானம் வலியுறுத்தியது.

இவ்வாறு அய்க்கிய நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று முதன் முதலாகக் கோரியது தி.மு.க. தான்.

கண்ணீரைப் பொழிய வைத்த தந்தை செல்வா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அமிர்தலிங்கம் 1977 இல் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவருக்கு தி.மு.க முழு ஆதரவு அளித்தது.
உண்மையில், இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி விளக்கிக் கூற டில்லியில் உள்ள பல்வேறு தலைவர்களை சந்திக்க நாங்கள் அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தோம்.

இலங்கையில் 1983 இல் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது, நானும், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களும் தமிழ் நாடு
சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.

இலங்கை அரசமைப்பு சட்டத்தின் 6 ஆவது திருத்தத்தை கறுப்பு சட்டம் என்று கூறி அதன் நகலை 1983 ஆகஸ்டில் நான் எரித்தேன். ஈழத் தமிழர்கள் தங்கள் விடுதலையைப் பற்றி
பேசுவதையே அந்த சட்டத்திருத்தம் தடை செய்தது. சட்டநகலை எரிக்கும் முன் “இந்தத் தீ பரவி ஈழத் தமிழர்களின் துன்பங்களையும் பொசுக்கட்டும்” என்று கூறினேன்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினையில் அய்க்கிய நாடுகள் அவை தலையிட வேண்டும் என்று வலியுறுத்தும் பொது மக்களின் ஒரு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. முதன்
முதலாகத் தொடங்கியது.

26-9-2009 அன்று காஞ்சிபுரத்தில் கொண்டாடப்பட்ட அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில், “ஈழத் தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழ்கின்றனர்.
அதனால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு பலத்த ஆதரவு அளித்தது என்ற ஒரே காரணத்துக்காக தி.மு.க. தலைமையிலான அரசு இரு முறை இந்திய அரசால் கலைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி நான் பல முறை நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். தி.மு.க. இது பற்றி தீர்மானங்களை பல முறை, தனது மாநாடுகளிலும்,
பொதுக்குழுக் கூட்டங்களிலும் நிறைவேற்றியிருக்கிறது. அதே போல பல கண்டனக் கூட்டங்களையும், பொதுக் கூட்டங்களையும், பேரணிகளையும், மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும், பட்டினிப்
போராட்டங்களையும், வேலை நிறுத்தப் போராட்டங்களையும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஆதரவாக ஏற்பாடு செய்து தி.மு.க. நடத்தியுள்ளது. ஒரு மக்களாட்சி நடைமுறையில் செய்யக்கூடிய அனைத்து
வகையான போராட்டங்களும் உண்மையான உணர்வுடன் எங்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டன.

நீண்ட மனித சங்கிலி

தமிழ்நாடு மாநில ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும் கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகத்தான் 24-10-2008 அன்று சென்னை மாநகரின் பாரிஸ் முனையில் இருந்து
செங்கல்பட்டு வரை 60 கி.மீ. தொலைவிலான ஒரு நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். அனைத்துக் கட்சித் தலைவர்களும் லட்சக்கணக்கான பொது மக்களும் அந்த மனிதச் சங்கிலிப்
போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டனர்.

2008-09 இல் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போரின் இறுதி நிலைகளிலும் கூட, தேவையின்றி இரத்தம் சிந்தப்படுவதைத் தடுத்து நிறுத்த பலவிதமான நடவடிக்கைகள்
மேற்கொள்ள தி.மு.க. தன்னால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டது. போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற நல்ல செய்தி 27-04-2009 அன்று காலை 5 மணி வரை எதிர் பார்த்தப்படி வராததால், அண்ணா சமாதியில்
சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தை நான் மேற்கொண்டேன். அப்போது கூட்டப் பட்ட இலங்கை அரசின் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டத்தில், நடந்து கொண்டிருக்கும் போர், எனது பட்டினிப் போராட்டம்
உள்ளிட்ட அப்போதிருந்த அனைத்து சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு போரை நிறுத்த முடிவு செய்தது. போர் நிறுத்தப்பட்டது என்று இலங்கை அரசு அறிவித்ததன் அடிப்படையில், இந்தியாவின் அயல்துறை
அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதன் நகல் ஒன்றினை நான் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று நான் நம்பியதால், எனது பட்டினிப்
போராட்டத்தை நான் கைவிட்டேன். ஆனால் நடந்தது என்னவென்றால், இலங்கை அரசு இந்திய அரசுக்கு தவறான தகவல் தந்து தவறாக வழிநடத்திவிட்டது என்பதுதான். இந்திய அரசின் கூற்றையே நானும் ஒட்டு
மொத்த உலகமும் நம்ப வேண்டி இருந்தது.

இவற்றையெல்லாம் நான் உங்களிடம் கூறுவதன் காரணம் ஏதோ உங்கள் மனதையெல்லாம் கவரவேண்டும் என்பதற்காக அல்ல. இலங்கையில் சூழ்நிலையைப் பற்றிய உங்கள் கருத்தை வடிவமைக்க
அது உதவியாக இருக்கும் என்பதாலேயே அவற்றையெல்லாம் நான் கூறுகிறேன். உங்கள் ஆலோசனைகளை அளிக்க அது உதவக்கூடும்.

இந்த மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டுள்ள அனைவரிடையேயும் ஒரு கொள்கை அறிக்கை சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுவே, முழுமையானதாக இருக்க முடியாது. ஆனாலும், ஈழத் தமிழர்களின்
மறு குடியேற்றம், நிவாரணம், மறுவாழ்வு ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டுவதாக அது இருக்கும்.

2009 போருக்கு முன்னும், பின்னும் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையைப் பற்றி இந்த அறிக்கை சுட்டிக் காட்டுவதாக இருக்கும். தமிழ் மக்கள் எவ்வாறு இரண்டாம் தரக்குடிமக்களாக
நடத்தப்பட்டனர், அரசமைப்பு சட்டப்படியான உரிமைகளும், வாய்ப்புகளும் அவர்களுக்கு எவ்வாறு மறுக்கப்பட்டன என்பதைப் பற்றி அது வெளியே கொண்டு வந்து காட்டும்.

தமிழ் இன மக்களின் கவுரவத்தையும், கலாச்சார அடையாளத்தையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட, ஆயுதப் போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற முயற்சிகளை காட்டுவதாக இருப்பது அது.

மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு

மோசமான போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசு செய்துள்ளது என்பது பற்றிய நடுநிலையான அமைப்புகளின் பல்வேறுபட்ட உண்மை அறியும் அறிக்கைகள்
தெரிவித்துள்ளதை அது நமக்கு நினைவுபடுத்துகிறது.

இலங்கை எவ்வாறு திட்டமிட்ட முறையில் சிங்கள மயமாக்கப்படுகிறது என்பதையும், தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒட்டுமொத்த ஒழுங்கின்மை நிலவுவதையும், சித்ரவதை செய்யப்படுவது
போன்ற தொல்லைகள் இழைக்கப்படுவதையும் நமது கவனத்துக்கு அது கொண்டு வருகிறது.

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை சகஜநிலைக்குத் திரும்பும்பாதையில் எத்தகைய முட்புதர்களும், சேறும் சகதியும், நிறைந்திருக்கின்றன என்பதை அது எடுத்துக் காட்டுகிறது.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவம் ஒரு அவசர நிலை ஆட்சியை நடத்துகிறது என்று அது குறிப்பிடுவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது.
போருக்குப் பிறகு செய்ய வேண்டிய சீரமைப்புப் பணிகளை விரைவில் மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்தி ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில்
அச்சுறுத்தல்கள் விடப்படுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

ஈழத் தமிழர்கள் செய்துள்ள தியாகம் மாபெரும் தியாகமாகும். அவர்கள் உள்ளான சித்ரவதைகள், தொல்லைகள், இழிவுகள், துன்பங்கள், அடக்குமுறைகள் கனவிலும் கற்பனை செய்து காண முடியாதவையாகும்.
எண்ணற்ற அயல்நாடுகளில் இருந்து அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு அசாதாரணமானதாக இருக்கிறது. இலங்கை அரசின் கொடுங்கோன்மை மனப்பான்மை பற்றி பல்வேறு நாடுகள் மற்றும் நடுநிலைக் குழுக்களால்
தெரிவிக்கப்பட்டுள்ள கண்டனங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. இவ்வளவுக்கும் பிறகும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் கூறப்போனால், அவை
எண்ணிக்கையிலும் அளவிலும் மேலும் மேலும் வளர்ந்து கொண்டுதான் வருகின்றன.

குறுகிய, நீண்ட கால தீர்வு

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு குறுகிய கால, அல்லது நீண்ட கால தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இங்கு வலியுறுத்தப்படுகிறது. அவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்,
புலம் பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தல், அவர்களுக்கு மறுவாழ்வளித்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு காணப்பட வேண்டும்.

கட்டுமானப் பணிகள் மற்றும் கவுரவமான வாழ்க்கை ஒன்றை மேற்கொள்வதற்காக சமூக வாழ்விற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுவது, ஆகியவை நடுத்தரத் தீர்வுகளில் அடங்கும்.
சொத்துரிமையை மீட்டுத் தருவது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுவது, மற்ற ஜனநாயக உரிமைகள் வழங்கப்படுவது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

நீண்ட காலத் தீர்வுகளில், நீண்டதொரு காலமாக விவாதிக்கப்பட்டு, பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வும் அடங்கும். ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி மிக ஆழமாக, அகன்ற முறையில் நீங்கள்
சிந்திப்பீர்கள் என்றும், அவற்றுக்கான ஜனநாயக முறையிலான சாத்தியமான தீர்வுகளைப் பற்றி உங்களின் மதிப்பு மிகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிப்பீர்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

எனது உரையை முடிக்கும் முன்பு, உங்கள் அனைவருக்கும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டதற்காகவும், அதன் விவாதங்களில் ஆக்க பூர்வமாகப் பங்களித்தமைக்காகவும் மற்றுமொரு முறை எனது
நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!!

- நன்றி : விடுதலை.


Wednesday, December 28, 2011

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்

கொடிக்கால்பாளையம், மேலத்தெரு, பள்ளிவாசல் முன்னாள் முத்தவல்லியும், கனி. சேட் அவர்களின் சகோதரரும், கா.செ.மு. அப்துல் சலாம் அவர்களின் மைத்துனரும், ரியாஸுதீன் அவர்களின் தந்தையுமான கனி. முக்தார் அஹமது அவர்கள் நேற்று இரவு மெளத். அன்னாரின் ஜனாஸா இன்று (28-டிசம்பர்-2011) காலை மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, December 10, 2011

டிசம்பர் 6 - த.மு.மு.க.வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திருவாரூர்.

‘டிசம்பர் 6’ - ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் வரும்போது, நம் ஒவ்வொருவருடைய கண் முன்னே வருவது பாபரி மஸ்ஜித்-தின் மீது விழுந்த கடப்பாரைகள் தான். காரணம், அவை ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தவை அல்ல... ஒவ்வொரு இஸ்லாமியரின் உயிரினும் மேலான இறை இல்லத்தின் மீது விழுந்தவை... இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த சவுக்கடி. மத ஒற்றுமைக்கு பெயர் எடுத்த இந்தியாவிற்கு, உலக நாடுகள் முன் தலைகுனிவை ஏற்படுத்திய செயல் அது...

வருடங்கள் 19 ஆயினும், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ‘லிபர்ஹான் ஆணையம்’ 17 ஆண்டுகளில் 48 முறை நீட்டிப்பு பெற்று, இந்தச் சம்பவத்தின் மீது தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த்தது. அதில், இந்தியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் துணை பிரதமர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் மத துவேஷ எண்ணம் கொண்ட பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் 68 பேர் மீது குற்றம் சுமத்தியது.

அதோடு மட்டுமல்லாமல், அயோத்தியில் ‘பாபரி மஸ்ஜித்’ அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம்? என்று தொடரப்பட்ட வழக்கில், பன்னெடுங்காலத்திற்குப் பிறகு, அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், இறை இல்லத்தை இடித்த கயவர்களுக்கு, அவ்விடத்தில் 3-ல் 2 பங்குகளும், இழந்தவர்களுக்கு 1 பங்கும் என பாகப்பிரிவினைத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது நடுநிலைவாதிகள் யாராலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு தீர்ப்பாகும். எனவே, இதனை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில், இஸ்லாமிய சமுதாயம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம், புராதான கதைகளுக்கும், மத நம்பிக்கைகளுக்கும் இடம் தராமல், இந்திய உரிமையியல் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்கக்கோரியும், ‘பாபரி மஸ்ஜித்’-தை இடித்த அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 நபர்களின் மீது விரைந்து நடவடிக்கைக் கோரியும்,

இந்த நாட்டில் உற்றார் உறவினராய், சகோதர, சகோதரிகளாய் வாழ்ந்து வரும் இந்து, முஸ்லிம் சமுதாய மக்களை பிரித்தாளும் கொள்கையுடன் செயல்பட்டு, சிறுபான்மை இனத்தவர்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, சங் பரிவார் அமைப்புகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியையும் கண்டித்து,

த.மு.மு.க.-வின் சார்பாக திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, டிசம்பர் 6 2011, செவ்வாய்க்கிழமைக் காலை ‘ சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ’ நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், முஹர்ரம் 10-ம் நாள் நோன்பு வைத்துக் கொண்டும், தங்களின் கைக்குழந்தைகளுடனும், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமியரும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் த.மு.மு.க. - ம.ம.க. வின் கிளைக் கழக நிர்வாகிகள் தலைமையில் கலந்து கொண்டனர்.

காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, த.மு.மு.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

தலைமையுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் சகோ. பிரபுதாஸ், சகோ. மன்னை செல்லசாமி, ம.ம.க-வின் மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது மாலிக் ஆகியோரின் கண்டன உரைகளுடன் தொடர்ந்தது.

இடையிடையே, கீழ்க்கண்ட வாசகங்கள் அடங்கிய ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்ட கோஷங்களை, சகோ. நாச்சிக்குளம் தாஜுதீன், மாவட்ட உலமாக்கள் அணித் தலைவர் சகோ. பி. எஸ். அஹமது, சகோ. குத்துபுதீன், சகோ. அடியற்கை ஜலீல், சகோ. ஹலீல் ரஹமான், முத்துப்பேட்டை சம்சுதீன், மாவட்டத்தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் முன்னின்று எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் நடுவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரிடம், மாவட்டத்தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் குத்துபுதீன், சாகுல், ஃப்ஜ்ருல் ஹக், வழக்கறிஞர். பிரபுதாஸ் மற்றும் வழக்கறிஞர். தீன் முஹம்மது ஆகியோர் அடங்கிய குழு சென்று அளித்தது. விடுமுறை தினமாக இருந்தபோதிலும், நீதிமன்றப் பதிவாளர் அவர்கள் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்து, இந்த மனுவைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிகழ்வாக, த.மு.மு.க.-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் சகோ. கோவை. முஜிபுர்ரஹ்மான் அவர்களின் எழுச்சிமிகு கண்டன உரை அமைந்தது.

அவரைத் தொடந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினரும் ஆசிரியருமான தோழர். எஸ். தியாகராஜன் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியாக, மாவட்டத் துணைத் தலைவர் சகோ. ஃப்ஜ்ருல் ஹக் அவர்கள் நன்றிக் கூறி துஆ ஓத, ஆர்ப்பாட்டம் மதியம் ஒரு மணியளவில் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டக் களத்தில் சில பதிவுகள்...

செய்தி மற்றும் படங்கள் :ஆரூர். மு. அஜ்மல் கான் ஜபருல்லா.

Thursday, November 10, 2011

குப்பைமேடாகும் குடியிருப்புப் பகுதி - கண்டு கொள்ளாத திருவாரூர் நகராட்சியின் ஆணவப்போக்கால் தொடரும் அவலம்

**

நீங்கள் இந்த புகைப்படங்களில் பார்ப்பது, திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட, 9-வது வார்டு, ராமகே ரோட்டின் நுழைவாயில்.

**

இங்கு, தினந்தோறும் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை, கொட்டிவைக்கின்றனர் நகராட்சி ஊழியர்கள். அதை அப்புறப்படுத்துவதில் மிகுந்த அலட்சியம் காட்டுகின்றனர். அப்படியே, அப்புறப்படுத்த வந்தாலும், லாரியை சாலையை மறித்து நிறுத்திக்கொள்கின்றனர். பொதுமக்களோ, மற்ற வாகனங்களோ சாலையில் செல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

**

இந்த பகுதியில், கொசு பெருகிவருகின்றது. சாலையைக்கடக்க முடியாமல், துர்நாற்றம் வீசுகின்றது. இப்பகுதியில் வசிப்போர் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இதைப் பற்றி, சென்றமுறை பதவியில் இருந்த, நகர்மன்ற உறுப்பினரிடமும்,நகராட்சி ஆணையரிடமும், பலமுறை புகார் செய்தும், செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் ஆகியது. பலனேதுமில்லை.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய உறுப்பினராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பதவியேற்றப்பிறகும் இந்த அவல நிலையே தொடர்கிறது.

இத்தனைக்கும் இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது.

ஆணையருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், இந்தப் பகுதி மக்களின் துயரம் என்றுதான் கண்களில் படுமோ? இந்த நிலை என்றுதான் மாறுமோ?!

ஆணையாளரே! அரசு வாகனத்தில், சிமிண்ட் சாலைகளாக மாற்றப்பட்ட, முக்கிய வீதிகளில் மட்டும் உலா வந்தால் போதாது. வரி கட்டும் மக்களின் துயரங்களைத் தீர்க்கவும் செய்யணும்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி உல்லாசமாய் இருப்பவர்களுக்கு இது என்று புரியுமோ?!

**புகைப்படங்கள் எடுத்தது 10.11.2011 அன்று காலை.

Monday, October 31, 2011

உள்ளாட்சித் தேர்தல் - 2011 -முடிவுகள் - திருவாரூர் நகராட்சி நிலவரம்

நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில், திருவாரூர் நகராட்சியில், நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அ.இ.அ.தி.மு.க.-வின் வேட்பாளராகப் போட்டியிட்ட வழக்கறிஞர்திரு.வி.ரவிச்சந்திரன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.-வின் வேட்பாளரும், தி.மு.கழகத்தின் நகரச் செயலாளருமான திரு.இரா.சங்கர் அவர்களை விட 1098 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நகரமன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு:

1. வி.ரவிச்சந்திரன் (அ.இ.அ.தி.மு.க.) - 11858 Elected

2. இரா.சங்கர் (தி.மு.க.) - 10760 Not Elected

3. பாலாஜி(எ)எம்.எத்திராஜ் ( தே.மு.தி.க.) - 1846 Deposit Lost

4. பி.ஜி.கருத்திருமன் ( காங்கிரஸ்) - 954 Deposit Lost

5. ரயில்.டி.பாஸ்கர் ( ம.தி.மு.க.) - 918 Deposit Lost

6. என். அக்பர் அலி ( பா.ம.க.) - 586 Deposit Lost

7. தே. தேவக்குமார் ( சுயேட்சை) - 269 Deposit Lost

8. ஆர்.பிங்களன் ( பா.ஜ.க.) - 191 Deposit Lost

மொத்தமுள்ள 30 வார்டுகளின் நிலவரம் பின்வருமாறு: (அடைப்புக்குறிக்குள் அவர்கள் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை)

வார்டு எண் 1-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் ஆர்.டி.உமாமகேஸ்வரி (679)

வார்டு எண் 2-ல் தி.மு.க.-வின் எம்.லெஷ்மி பிரியா (661)

வார்டு எண் 3-ல் தி.மு.க.-வின் டி.செந்தில் (421)

வார்டு எண் 4-ல் சுயேட்சை வேட்பாளர் ஜி.வரதராஜன் (537)

வார்டு எண் 5-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் கே.மலர்விழி (534)

வார்டு எண் 6-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் எஸ்.பிரேமா (598)

வார்டு எண் 7-ல் மனிதநேய மக்கள் கட்சி-யின் ஐ.கலிபுல்லா (314) - *சுயேட்சை சின்னம்

வார்டு எண் 8-ல் இ.தே.காங்கிரஸ்-ன் எம்.ஜாஹிர் ஹுசேன் (184)

வார்டு எண் 9-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் வி.பாஸ்கர் (296)

வார்டு எண் 10-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் மாஸ்டர்.எம்.தண்டாயுதபாணி (257)

வார்டு எண் 11-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் ஆர்.சித்ரா (360)

வார்டு எண் 12-ல் தி.மு.க.-வின் டி.ராஜகுமாரி (230)

வார்டு எண் 13-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் ஆர்.தெட்சிணாமூர்த்தி (583)

வார்டு எண் 14-ல் தி.மு.க.-வின் பி.ஜெயமணி(343)

வார்டு எண் 15-ல் தி.மு.க.-வின் என்.ராமு (480)

வார்டு எண் 16-ல் இ.தே.காங்கிரஸ்-ன் எம்.சம்பத் (322)

வார்டு எண் 17-ல் தி.மு.க.-வின் எம்.தேவி (475)

வார்டு எண் 18-ல் தி.மு.க.-வின் என். அசோகன் (501)

வார்டு எண் 19-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் எஸ்.சாந்தி (453)

வார்டு எண் 20-ல் தி.மு.க.-வின் ஜெ.காமராஜ் (416)

வார்டு எண் 21-ல் தி.மு.க.-வின் பி.ரெகுபதி (445)

வார்டு எண் 22-ல் தே.மு.தி.க.-வின் மோ.பிரசன்னா (340)

வார்டு எண் 23-ல் தி.மு.க.-வின் ஜெ.ஜமால் முகம்மது (519)

வார்டு எண் 24-ல் தி.மு.க.-வின் டி.கல்யாணி (282)

வார்டு எண் 25-ல் தி.மு.க.-வின் எஸ்.அன்வர் உசேன் (379)

வார்டு எண் 26-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் எஸ்.குருசாமி (439)

வார்டு எண் 27-ல் தி.மு.க.-வின் சு.தாஜுதீன் (441)

வார்டு எண் 28-ல் தி.மு.க.-வின் ஜெ.அய்யனார் (328)

வார்டு எண் 29-ல் தி.மு.க.-வின் வே.செந்தில் குமார் (463)

வார்டு எண் 30-ல் தி.மு.க.-வின் கே.முருகையன் (195)

ஆகியோர் நகரமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 30 வார்டுகளில்,

தி.மு.க. - 16 வார்டுகள்

அ.இ.அ.தி.மு.க. - 9 வார்டுகள்

இ.தே.காங்கிரஸ் - 2 வார்டுகள்

தே.மு.தி.க. - 1 வார்டு

மனிதநேய மக்கள் கட்சி (சுயேட்சை சின்னத்தில்) - 1 வார்டு

சுயேட்சை - 1 வார்டு

ஆகியவற்றை கைப்பற்றியுள்ளன.

தலைவர் பதவியை தி.மு.க. இழந்தாலும், பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தொடர்கிறது.

மீண்டும் ஒரு முறை, நகர மக்கள், திருவாரூர் தி.மு.க.-வின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளனர்.


-ஆரூர். மு. அஜ்மல் கான்.

கொடிக்கால்பாளையம் த.மு.மு.க.-ம.ம.க.-வினரின் சமூகப் பணி

தொடர்ந்து பெய்துவரும் மழையால், கொடிக்கால்பாளையம், மேலத்தெரு மையவாடி முனையிலிருந்து, ஜும்’ஆ பள்ளிவாசல் வரையிலும் சாலையில் தேங்கியிருக்கும் மழைத்தண்ணீரால், போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்து, அதில் மக்கள் சென்று வர மிகுந்த சிரமப்படும் நிலையில், இன்று (27-10-2011, வியாழக்கிழமை) காலை நமது 7-வது வார்டு கவுன்சிலர் ஐ. கலிபுல்லா மற்றும் த.மு.மு.க. மற்றும் ம.ம.க. சகோதரர்கள், த.மு.மு.க. மாவட்டத் தலைவர் முஜிபுர்ரஹ்மான், ம.ம.க. நகர செயலாளர் காதர் ஆகியோர் மேற்பார்வையில், சாலையில் தேங்கியிருக்கும் மழைத் தண்ணீரை வடியச் செய்யும் பணியில் கொட்டும் மழையிலும் ஈடுபட்டனர்.

களத்தில் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள்

களத்தில் ம.ம.க.-வின் திருவாரூர் நகரமன்றத்தின் 7-வது வார்டு உறுப்பினர் ஐ. கலிபுல்லா அவர்கள்

களத்தில் ம.ம.க.-வின் திருவாரூர் நகரமன்றத்தின் 7-வது வார்டு உறுப்பினர் ஐ. கலிபுல்லா மற்றும் ம.ம.க.-வின் திருவாரூர் நகர செயலாளர் காதர் ஆகியோர்


படங்கள் மற்றும் செய்தி : ஆரூர். மு. அஜ்மல்கான்.

கொடிக்கால்பாளையத்தில் திருவாரூர் நகரமன்றத் தலைவரின் ஆய்வுப் பணி - 31 அக்டோபர் 2011

நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரன்

திருவாரூர் நகராட்சியின் 7-வது மற்றும் 8-வது வார்டுகளை உள்ளடக்கிய கொடிக்கால்பாளையம் பகுதியில், மேலத்தெரு, தெற்குத் தெரு, கடைவீதி, நடுத்தெரு மற்றும் வடக்குத் தெரு ஆகிய இடங்களில் இன்று காலை, திருவாரூர் நகராட்சிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரன் அவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரனுடன் (இடமிருந்து 2-வது) 7 மற்றும் 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஐ. கலிபுல்லா (இடது) மற்றும் எம். ஜாகிர் உசேன் (வலது புறம்)

கொடிக்கால்பாளையத்தில் நடைபெற்றுவரும் சிமெண்ட் சாலைப் பணிகள், இப்பகுதியில் கால்வாய்கள், நகர்மன்றத் தலைவருடன் 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம். ஜாகிர் உசேன் மழைநீர் வடிகால்கள், சாக்கடை வசதி, சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றுவது ஆகியன பற்றிய ஆய்வுகள் நடைப்பெற்றது.

சிமெண்ட் சாலைப் போடும் பணி இன்னும் தொடங்கப்படாமல் இருக்கும் கொடிக்கால்பாளையம் நடுத்தெருவின் சீரழிந்த நிலைமை. பாதிவேலை முடிந்த நிலையில் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு

இவருடன் 7-வார்டு உறுப்பினர் ஐ. முகம்மது கலிபுல்லா, 8-வது வார்டு உறுப்பினர் எம். ஜாகிர் உசேன் மற்றும் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான், ம.ம.க. நகர செயலாளர் காதர் ஆகியோர் உடன் சென்றனர்.

- ம.ம.க. நகரச் செயலாளர் காதர் அவர்களின் படங்கள் மற்றும் குறிப்புகளுடன்

ஆரூர். மு. அஜ்மல் கான்.

நகர்மன்றத் தலைவருடன் ம.ம.க. திருவாரூர் நகர செயலாளர் காதர் அவர்கள் நகர்மன்றத் தலைவருடன் த.மு.மு.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள்